Thursday 23 April 2015

திருப்பதி பற்றிய அரிய தகவல்கள்!


தெய்வச் சிலைகள் பொதுவாக கருங்கல்லில் செதுக்கப்பட்டிருக்கும். எங்காவது ஒரிடத்திலாவது சிற்பியின் உளி பட்ட இடம் தெரியும். ஆனால், இப்படி எவ்விதமான அடையாளத்தையும் வெங்கடாஜபதி சிலையில் காணமுடியாது. அது மட்டுமல்ல! சிலையில் வடிக்கப் பட்டுள்ள நெற்றிச் சுட்டி, காதணிகள், புருவங்கள், நாகாபரணங்கள் எல்லாம் பாலீஷ் போட்ட நகைபோல பளபளப்பாக மின்னுகின்றன.

திருமலை 3000 அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம். இருந்தாலும், அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீரால் அபிஷேகம் செய்யும் போதும், பெருமாளுக்கு வியர்த்துவிடும். பீதாம்பரத்தால் அந்த வியர்வையை ஒற்றி எடுப்பார்கள். ஏனெனில், ஏழுமலையான் சிலை எப்போதும் 110 டிகிரி பாரன்ஹுட் வெப்பத்திலேயே இருக்கும் இது ஒரு அதிசயம் தானே! ஒவ்வொரு வியாழக் கிழமையும், ஏழுமலையானுக்கு அபிஷேகம் செய்வதற்கு முன்னதாக நகைகளைக் களைவர். அப்போது ஏழுமலையானின் ஆபரணங்கள் சூடாகக் கொதிப்பதை உணர்கின்றனர்.

இங்குள்ள மடைப்பள்ளி மிகவும் பெரியது. இங்கு லட்டு, பொங்கல், தயிர்சாதம், புளிச்சாதம், வடை, முறுக்கு, ஜிலேபி, அதிரசம், போளி, அப்பம், பாயாசம், தோசை, ரவாகேசரி, பாதாம்கேசரி, முந்திரிப்பருப்பு கேசரி ஆகியவை தினமும் தயாராகின்றன. இதில் லட்டு முதலிடம் பெற்று விளங்குகிறது.

ஏழுமலையானுக்கு ஒருபுதிய மண்சட்டியிலேயே பிரசாதம் படைப்பர். தயிர்சாதம் தவிர வேறு எந்த நைவேத்யமும், கர்ப்பகிரகத்திற்கு முன்னுள்ளகுலசேகரப்படியைத் தாண்டுவதில்லை. இந்த மண்சட்டியும், தயிர்சாதமும் பிரசாதமாக கிடைப்பதை வாழ்வில் மிகப்பெரிய பாக்கியமாகப் பக்தர்கள் கருதுகின்றனர்.

பெருமாளுக்கு உடுப்பு மிகவும் பிரத்யேகமாகத் தயாரிக்கப்படுகிறது. ஒரு முழம் நீளமும், ஆறு கிலோ எடையும் கொண்ட பட்டுப்புடவை பீதாம்பரமே இவருக்குரிய ஆடையாகத் திகழ்கிறது. இதை பெருமாளுக்கு சாத்த அலுவலகத்தில் 12 ஆயிரத்து 500 ரூபாய் செலுத்த வேண்டும். இந்த ஆடைக்கு மேல்சாத்து வஸ்திரம் என்று பெயர். வெள்ளியன்று மட்டுமே இதை அணிவிக்க முடியும். பணம் செலுத்தியவர்கள் வஸ்திரம் சாத்த 3 வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

உள்சாத்து வஸ்திரம் என்ற ஆடையையும் பெருமாளுக்கு அணிவிப்பர். இதற்குரிய கட்டணம் 20 ஆயிரம் ரூபாய். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 15 வஸ்திரங்கள் சாத்துவதற்கு அனுமதிக்கிறார்கள். பணம் செலுத்தியபின் இதை அணிவிக்க 10 வருடங்கள் காத்திருக்கவேண்டும்.

பக்தர்கள் சமர்ப்பிக்கும் வஸ்திரங்கள் தவிர, அரசாங்கம் சமர்ப்பிக்கும் வஸ்திரங்களை ஆண்டுக்கு இரண்டு முறை பெருமாளுக்கு அணிவிக்கின்றனர்.

ஏழுமலையானின் அபிஷேகத்திற்கு எங்கிருந்து பொருட்கள் வருகிறது தெரியுமா?
ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ, நேபாளத்தில் இருந்து கஸ்தூரி, சீனாவில் இருந்து புனுகு, பாரீசில் இருந்து வாசனைத் திரவியங்கள் வருகின்றன. ஒரு தங்கத் தாம்பாளத்தில் சந்தனத்தோடு கரைக்கப்பட்டு அபிஷேகம் செய்யப்படும். 51 வட்டில் பால் அபிஷேகம் செய்தபின், கஸ்தூரியும், புனுகும் சாத்துவர்.தினமும் காலை 4.30- 5.30 மணிக்குள் அபிஷேகம் நடக்கும். அபிஷேகத்திற்கு ஆகும் செலவு ஒரு லட்சம். பணம் செலுத்தியவர்கள் 3 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டும்.

பெருமாளுக்குரிய ரோஜாப்பூக்கள் ஐரோப்பாவில் உள்ள ஆம்ஸ்டர்டாமில் இருந்து விமானத்தில் கொண்டு வரப்படுகின்றன. ஒரு ரோஜாப்பூவின் விலை ரூ.80. பக்தர்களின் செலவிலேயே இந்தப் பூக்கள் வந்து சேர்கின்றன.

சீனாவில் இருந்து கற்பூரம், அகில், சந்தனம், அம்பர், தக்கோலம், லவங்கம், குங்குமம், தமாலம், நிரியாசம் போன்ற வாசனைப்பொருட்கள் கொண்டு வரப்படுகின்றன.

ஏழுமலையானின் நகைகளின் மதிப்பு பல ஆயிரம் கோடி ரூபாய். இவருடைய நகைகளை வைத்துக் கொள்ள இடமும் இல்லை. சாத்துவதற்கு நேரமும் இல்லை.

ஏழுமலையான் சாத்தியிருக்கும் சாளக்கிராம தங்கமாலை 12 கிலோ எடை கொண்டது. இதை 3 அர்ச்சகர்கள் சேர்ந்து தான் சாத்தமுடியும். சூரிய கடாரியின் எடை 5 கிலோ. ஒற்றைக்கல் நீலம் மட்டும் 100 கோடி மதிப்பு கொண்டது. உலகிலேயே இதைப்போன்ற நீலக்கல் வேறு கிடையாது.

பல்லவர்கள், சோழர்கள், பாண்டியர்கள், விஜயநகர மன்னர்கள் பெருமாளுக்கு காணிக்கைகளைச் செலுத்தியுள்ளனர். ராஜேந்திரச்சோழன், கிருஷ்ண தேவராயர், அச்சுதராயர் ஆகியோருடைய திருப்பணிகள் கல்வெட்டு மற்றும் செப்பேடுகளில் பொறிக்கப்பட்டுள்ளன.

மராட்டிய மன்னர் ராகோஜி போன்ஸ்லே மிகப்பெரிய எமரால்ட் பச்சைக்கல்லை பெருமாளுக்கு காணிக்கையாக்கியுள்ளார். இப்பதக்கம் இவருடைய பெயரிலேயே அழைக்கப்பட்டு வருகிறது. இக்கோயிலில் பலதிருப்பணிகள் செய்த கிருஷ்ணதேவராயர் தனது மனைவியுடன் நிற்கும் சிலை கோயிலில் உள்ளது. கோயிலுக்குள் வரிசையில் செல்லும் போது இதைக் காணலாம்.

அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்வதற்கான வெள்ளி வெங்கடாஜபதி விக்ரகம் 966ம் ஆண்டில் செய்யப்பட்டதாகும். பல்லவ மன்னன் சக்திவிடங்கனின் மனைவி காடவன் பெருந்தேவி இந்த விக்ரகத்திற்குரிய நகைகள் தந்துள்ளார்.

வெள்ளிக்கிழமைகளிலும், மார்கழி மாதத்திலும் பெருமாளுக்கு வில்வார்ச்சனை செய்யப்படுகிறது.

மகா சிவராத்திரியில் ÷க்ஷத்ரபாலிகா என்ற உற்சவம் நடைபெறும். அன்று உற்சவர் வைர விபூதி நெற்றிப்பட்டை அணிந்து திருவீதியுலா எழுந்தருள்வார். தாளப்பாக்கம் அன்னமய்யா ஏழுமலையானையே பரப்பிரம்மமாகவும், சிவாம்சமாகவும், சக்தி அம்சமாகவும் பாடிய பாடல்கள் சிறப்பானவை.

அபிஷேகத்தின் போது ஏழுமலையான் தன்னுடைய மூன்றாவது கண்ணைத் திறக்கிறார் என்றொரு ஐதீகம் உள்ளது.

திருமலை திருப்பதி கோயில் ஸ்தலவிருட்சம் புளியமரம்.

சாத்வீக கோலத்தில் இருந்தாலும் தெய்வீக கோலங்களில் ஆயுதம் இடம் பெற்றிருக்கும். ஆனால், திருமலையில் ஏழுமலையான் எவ்விதமான ஆயுதமும் பிடிக்காமல் நிராயுதபாணியாக சேவை சாதிக்கிறார்.

ஆங்கிலேயர்களில் சர்தாமஸ் மன்றோ, கர்னல் ஜியோ ஸ்டிராட்டன், லெவெல்லியன் என்ற வீரர் ஆகியோர் பெருமாளின் பக்தர்களாக இருந்ததோடு பல நேர்த்திக்கடன்களைச் செலுத்தியுள்ளனர். இதில் இன்று வரை பெருமாளுக்கு மன்றோ தளிகை என்றொரு ஒரு நிவேதனம் ஆங்கிலேயர் பெயரால் அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

திருப்பதி அலமேல்மங்கைக்குரிய ஆடைகத்வால் என்னும் ஊரில் பருத்தியில் தயாரிக்கப்படுகிறது. செஞ்சு இனத்தைச் சேர்ந்த நெசவாளர்கள் இதை பயபக்தியுடன் நெய்கிறார்கள். தாயாரின் திருமேனியில் படும் இந்த ஆடையை நெய்யும் போது மூன்றுவேளை குளிப்பதும், மாமிசம் உண்ணாமல் இருப்பதும் ஆகிய நடைமுறைகளைத் தவறாமல் பின்பற்றுகின்றனர்.

ஏழுமலையான் அபிஷேக நீர் குழாய் மூலம் இங்குள்ள புஷ்கரணியிலேயே (கோயிலை ஒட்டிய தெப்பக்குளம்) மீண்டும் கலக்கிறது. ஏழுமலையானின் திருமேனியில் பட்டதால் அந்நீரின் புனிதத்தன்மையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

1180 கல்வெட்டுகள் இங்கு உள்ளன. இதில் 1130 கல்வெட்டுகள் தமிழ் மொழியிலும், 50 கல்வெட்டுகள் தெலுங்கு மற்றும் கன்னடமொழியிலும் அமைந்துள்ளன.

Tuesday 21 April 2015

"ஆன்மீக சங்கமம்" மாத இதழில் ஜோதிடர் இமயம் அபிராமி சேகர் அவர்களின் 2015 ஏப்ரல் மாத நட்சத்திர பலன்கள்

"ஆன்மீக சங்கமம்" மாத இதழில் ஜோதிடர் இமயம் அபிராமி சேகர் அவர்களின் 2015 ஏப்ரல் மாத நட்சத்திர பலன்கள்







"ஆன்மீக மாத" இதழில் ஜோதிட இமயம் அபிராமி சேகர் அவர்களின் ஏப்ரல் மாத கேள்வி பதில்கள்.?

"ஆன்மீக மாத" இதழில் ஜோதிட இமயம் அபிராமி சேகர் அவர்களின் ஏப்ரல் மாத கேள்வி பதில்கள்.?



ராணி வார இதழில் சித்திரை சிறப்பிதழில் ஜோதிட இமயம் அபிராமி சேகர் அவர்களின் "மன்மத" தமிழ் வருட பலன்கள்

ராணி வார இதழில் சித்திரை சிறப்பிதழில் ஜோதிட இமயம் அபிராமி சேகர் அவர்களின் "மன்மத" தமிழ் வருட பலன்கள்



Sunday 12 April 2015

உதாரண ஜாதகங்களுடன் ஜோதிட கேள்வி பதில்கள் 02

ஜாதகம் - 2
பெயர் தி.சிவரஞ்சினி, D/o. தினகரன்
பிறந்த தேதி : 25-11-1981
பிறந்த நேரம் : காலை மணி 9.41,
பிறந்த இடம் : சென்னை
வியாழன் குரு தசை இருப்பு : 11-06-15


கேள்வி
எனது மகளின் காதல் திருமண வாழ்வு எப்படி இருக்கும்? குழந்தைபாக்கியம் உண்டா? எப்பொழுது? சுயதொழில் தொடங்கலாமா? உடல் ஆரோக்கியம் எப்படி இருக்கும்? இவள் ஜாதகபப்டி கணவர் சுயதொழில் தொடங்கலாமா?


பதில்
தனுசு லக்னம் விருச்சிக ராசி விசாக நட்சத்திரத்தில் பிறந்த உங்கள் புதல்விக்கு 7, அதிபதி புதன் 10ம் அதிபதியாகவும் வந்து அவர் 12ம் இடத்தில் அமர்வது சுமாரான பலன் ஆகும். 7க்குடையவர் 12ல் அமர்வது பிரிவு பிரச்சினை போராட்டங்களைக் குறிக்கும். அந்தப் புதன் 1,4க்குடைய குரு சாரம் பெற்று அந்தக் குரு 11-ல் அமர்வதால் அவர்கள் மீண்டும் ஒன்று சேர்வதற்கும் சேர்ந்து வாழ்வதற்கும் பாக்யம் உண்டு. எனவே உங்கள் மகளின் மணவாழ்க்கையை பற்றிய கவலையை விடவும். தற்பொழுது உங்கள் புதல்விக்கும் 7ம் அதிபதி புதன் திசையில் புதன் புத்தி 6.11.2014 வரை நடப்பில் உள்ளது. இக்காலங்களில் கணவன் மனைவி பிரிவு ஏற்படுவது போல் தோற்றம் இருக்குமேயன்றி பிரிவு ஏற்படாது.

உடல் ஆரோக்யத்தைப் பொறுத்தவரை மிக அதிக கவனம் தேவை. 12ம் இடம் வைத்தியச் செலவுகளையும் ஆஸ்பத்திரியைக் குறிக்கும். அடுத்துவரும் கேது புத்தியும் கேது 2ம் இடத்தில் இருந்தாலும் அவர் 9க்குடைய சூரியன் சாரம் பெற்று அந்தச் சூரியன் 12ல் அமர்வது உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சுயதொழில் தொடங்க இது உகந்த காலமல்ல, சுமார் 4 ஆண்டு காலத்திற்கு சுயதொழில் தொடங்குவது சிறப்பானதல்ல. மகள் ஜாதகப்படி கணவருக்கு சுயதொழில் தொடங்க வாய்ப்பில்லை, அடிமைக்கு வேலைக்கு செல்வதற்கே அதிக வாய்ப்புகள் உண்டு, மீறி சுயதொழில் தொடங்கினால் லாபகரமாக இருக்காது. 6ம் இடம் அடிமைக்கு வேலைக்குச் செல்வதையும் 7ம் பாவம் என்பது சுயதொழிலையும் குறிக்கும். மனைவி ஜாதகப்படி கேது புத்தி முடிந்து சுக்ர புத்தியில் சுயதொழில் தொடங்கினாலும் லாபகரமாக இருக்காது.

உதாரண ஜாதகங்களுடன் ஜோதிட கேள்வி பதில்கள் 01

ஜாதகம் - 1
பெயர் : V.சுரேஷ்ராஜன், S/o.வள்ளிநாயகம்,
பிறந்த தேதி : 19-07-1961,
பிறந்த நேரம் இரவு மணி 7.05,
பிறந்த இடம் : மானாமதுரை,
சந்திர தசை இருப்பு 04-05-26



கேள்வி
எனது ஆசிரியர் பணியை ஒழுங்காக நிறைவு செய்வேனா? எனது உடலில் உள்ள நோய் தன்மை குறையுமா? சுய தொழில் செய்யலாமா? குழந்தைகளால் நன்மையுண்டா? மனைவியின் உடல் ஆரோக்கியம் எப்படி இருக்கும்?


பதில்
மகர லக்னம் கன்னி ராசி அஸ்த்த நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்கு தற்பொழுது சனி திசையில் சுக்ர புத்தி 03.01.2017 வரை நடப்பில் உள்ளது. சனி உங்கள் லக்னத்திற்கு 1,2ம் வீட்டிற்கு அதிபதியாகி அவர் லக்னத்தில் அமர்ந்து அவர் 8க்குடைய சூரியன் சாரம் பெற்று அச்சூரியன் 7ல் அமர்வது சிறப்பானதல்ல. 8ம் இடம் உடல் ஆரோக்ய குறைவையும் 7ம் இடம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவையும் காட்டும். மேலும் வேலையில் சற்று கவனம் தேவை. சுக்ரன் உங்கள் லக்னத்திற்கு 5.10க்குடைவராகி அவர் 5ல் அமர்ந்து 7க்குடைய சந்திரன் சாரம் பெற்று அந்தச் சந்திரன் 9ல் அமர்வது பணியை விட்டு வெளியே வருவது போல் தோன்றினாலும் பணியை விடமாட்டீர்கள்.

5ம் இடம் என்பது வேலையை விட்டு வெளியே வருவதைக் காட்டினாலும் 9ம் இடம் என்பது பள்ளி, கல்லூரி பல்கலைக்கழகம் மற்றும் ஆசிரியரைக் குறிப்பிடும். நீங்கள் ஆசிரியராக இருப்பதால் ஒழுங்காய் பணி நிறைவு அடைய வாய்ப்புகள் உண்டு. 5,9 பாவங்கள் தொடர்பு கொள்வதால் உடலில் நோய் ஏற்பட்டாலும் உடனே அது குணமாகும். மேலும் திசை 8,7 பாவங்களைக் காட்டுவதால் ஆப்ரேஷன் செய்ய வாய்ப்புகள் அதிகமாகும், 8ம் இடம் என்பது ஆப்ரேஷனைக் குறிக்கும். குழந்தைகளால் உங்களுக்கு எதிர்பார்த்த நன்மைகள் அமையும். அவர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும், மனைவியின் உடல்நலத்தைப் பொறுத்தவரைப் பெரிய அளவில் நோய்த் தாக்கம் இல்லை. எனவே கவலைப்பட வேண்டாம்.

Saturday 11 April 2015

ஜோதிடம் ஒரு அறிமுகம்

அனைவருக்கும் வணக்கம் 


ஈரேழு லோகங்களுக்கும் முழுமுதற் கடவுளாம் சகல காரியங்களையும் தடையின்றி நிறைவேற்றும் எல்லாம்வல்ல எம்பெருமான் “ஸ்ரீவிநாயாகப்” பெருமானை” வணங்குகிறேன். ஆக்கல், காத்தல், அழித்தல், என முத்தொழில்களையும் புரியும் ஸ்ரீபிரம்மா ஸ்ரீவிஷ்ணு ஸ்ரீசிவன் ஆகிய மும்மூர்த்திகளையும் வணங்குகிறேன். சகலகலைகளுக்கும் அதிபதியாம் வெண்தாமரையில் வீற்றிருக்கும் வாக்குவாணியாம் “ஸ்ரீகலைவாணியை” வணங்குகிறேன். நம்முடைய தலைவிதியை மாற்றி நம்மை எல்லாம் நல்வழிப்படுத்தும் நவக்கிரகங்களையும் அதன் துணைக் கிரகங்களையும் போற்றி வணங்குகிறேன். என் குல தெய்வமான “ஸ்ரீபைரவரையும்” நான் அன்றாடும் தொழுது வணங்கும் அன்னை “ஸ்ரீஅபிராமியையும்” அன்னை “ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரையும்” ஜோதிடத்தின் அதிபதியாம் தகப்பன் சுவாமியுமான ஞான மூர்த்தியான எம்பெருமான் “ஸ்ரீமுருகனையும்” உலக மக்கள் அனைவரும் மகிழ்வுடன் வாழ வழிவகுக்கும் அன்னை “ஸ்ரீமஹாலஷ்மியையும்” மற்றும் தேவர்கள், தேவதைகள், தேவதூதர்கள், முனிவர்கள், ஞானிகள், ரிஷிகள், மகான்கள், சித்தர்கள், யோகிகள், சாதுக்கள், சந்நியாசிகள், மற்றும் பன்னிரு ஆழ்வார்கள், அறுபத்து மூன்று நாயன்மார்கள், நால்வர் பெருமக்கள், இருபத்தியோரு சேனை அறுபத்தியோரு பந்தி தெய்வங்களையும் மற்றும் இறைத்தூதர்களையும் போற்றி வணங்குகிறேன். என் ஜோதிட ஆன்மீக மாந்தீரிக குருநாதர்களையும் என்னை இவ்வுலகில் ஈன்றெடுத்து அறிமுகப்படுத்திய என் தாய் தந்தையர்களையும் வணங்கி இந்த இணையதளத்தில் வருகைபுரியும் உங்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன்.

இவ்வுலகில் எவ்வளவோ உயிரினங்கள் மற்றும் ஜீவராசிகள் பிறந்து வளர்ந்து வாழ்ந்து மடிகின்றன. அவை எல்லாம் ஐந்து அறிவுக்குட்பட்ட ஜீவராசிகள் ஆகும். இத்துடன் மனித ஜீவனும் பிறந்து வளர்ந்து வாழ்ந்து மடிந்தாலும் மனித ஜீவனுக்கு மட்டுமே இறைவன் படைப்பில் ஆறறிவு உடையவனாகப் படைக்கப்பட்டுள்ளான். மற்ற உயிர்களுக்கெல்லாம் பேசும் திறனோ சிந்திக்கும் திறனோ இருந்தது இல்லை. ஆனால் மனித இனத்துக்கு மட்டுமே பேசும் திறனும் சிந்திக்கும் ஆற்றல் உடையவனாக இறைவன் படைத்துள்ளான். இறைவன் படைப்பில் இப்படிப்பட்ட மனிதனது வாழ்க்கையில் தான் மகிழ்ச்சி, இன்பம், துன்பம், ஏற்றம், இறக்கம், உயர்வு, தாழ்வு, ஒற்றுமை, வேற்றுமை, போட்டி பொறாமைகள் இவையனைத்தும் அடங்கியுள்ளன. இவையெல்லாம் ஒரு தனிமனித வாழ்க்கையில் நடைபெறுவதற்கு என்ன காராணம் என்று பார்த்தோமானால் அவனது முன்ஜென்ம பாவபுண்ணிய கர்மபலன்களே காரணமாக அமையும்.

இந்து சாஸ்த்திரமே ஒரு தனிமனிதனின் “கர்மவினையைப்” பற்றியது ஆகும். அவரவர் போன ஜென்மத்தில் அல்லது முன் ஜென்மத்தில் செய்த பாவபுண்ணியங்கள் அடிப்படையிலேயே இச்ஜென்மத்தில் அவரவது வாழ்க்கை அமையும் என்று கூறுகிறது. ஜோதிட சாஸ்த்திரமும் அதையேதான் வலியுறுத்துகிறது. இந்த ஜோதிட சாஸ்த்திரம் மூலம் ஒரு மனிதனின் முன் ஜென்மம் இச்ஜென்மம் மற்றும் வரும் ஜென்மங்களின் முக்காலப் பலன்களையும் அறிந்து கொள்ள முடியும், அதன் அடிப்படையில் ஒருவன் தன் வாழ்க்கையை அறிந்து வளமுள்ளதாகவும் மகிழ்ச்சிகரமானதாகவும் மாற்றிக் கொள்ள முடியும்.

இவ்வுலகில் ஒரு மனிதன் பிறந்து வளந்து வாழ்ந்து வரும் காலங்களில் அவனுக்குத்தான் எவ்வளவோ பிரச்சினைகள் போராட்டங்கள் ஏற்பட்டு விடுகின்றன. ஒவ்வொருவரும் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற துடிப்புடன் வாழ்ந்துவரும் காலங்களில் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க வேண்டியுள்ளது. ஏனெனில் இந்த உலகமே சுழன்று கொண்டுதான் இருக்கிறது. இந்தப் பூமி பந்தும் சுற்றி சுழன்று கொண்டு இருக்கிறது. இப்பூமியில் வாழும் நாமும் ஓடிக்கொண்டே இருக்கிறோம். திரும்பிப் பார்க்க யாருக்கும் நேரமில்லை. நாம் திரும்பிப் பார்ப்பதற்குள் மற்றவர்கள் நம்மை முந்தி ஓடிவிடுவர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இப்படிப்பட்ட பிரச்சினைகளிருந்து எல்லாம் எப்படி மீண்டுவரலாம் எனபதை குறிப்பிடுவதே ஜோதிடம் ஆகும்.

ஒரு மனிதன் என்றால் முதலில் அவனது ஆயுள், நல்ல உடல் நலம், நல்ல கல்வி, நல்ல வேலை, நல்ல தொழில், திருப்தியான மகிழ்ச்சிகரமான மனவாழ்வு மற்றும் நல்ல குழந்தை பாக்யம், இத்துடன் சொந்தமாக வீடு, வண்டி வாகனங்கள், இவையெல்லாம் பொதுவான விஷயங்கள் ஆகும். இத்துடன் தாய், தந்தை மற்றும் சகோதர சகோதரிகள் உற்றார் உறவினர்கள் நண்பர்கள் என்று பலவித உறவுகளையும் சார்ந்தே அவனது வாழ்க்கை அமைந்துள்ளது. இவை பற்றி எல்லாம் விரிவாகவும் விளக்கமாகவும் தெரிந்து கொள்ள உதவுவதே ஜோதிடம் ஆகும்.

முதலில் குறிப்பிட்டுள்ளது போல் மூன்று காலங்களையும் உணர்த்தக் கூடியது ஜோதிடம் ஆகும். கடந்த காலம் எனபது அவனது போன ஜென்மத்தில் அவன் செய்த பாவ புண்ணியங்கள் நல் தீவினைகள் அவனது பிறப்பு போன்றவற்றைக் குறிப்பிடும். இதிலிருந்து தீவினைகள் இருப்பின் அதிலிருந்து எப்படி விலகுவது விடுபடுவது என்பதை ஜோதிடம் தெளிவாகக் குறிப்பிடும். நிகழ்காலம் என்பது தற்பொழுது என்ன மாதிரியான தசாபுத்திகள் நடக்கிறது அதனால் ஏற்படும் நல்வினை தீவினை என்ன அதிலிருந்து எப்படி விடுபடுவது என்பதைக் குறிப்பிடும். எதிர்காலம் எனபது எதிர்காலத்தில் என்ன நடக்கும் எப்படி நடக்கும் என்பது பற்றியும் அதிலிருந்து நாம் அடையும் நன்மை தீமைகளையும் மற்றும் கெடுபலன்கள் இருப்பின் அதிலிருந்து விடுபடவேண்டிய உபாயங்களையும் இச் ஜென்மத்திலும் மறு ஜென்மத்திலும் அடைய வேண்டிய நன்மைகளை ஜோதிடம் வலியுறுத்துகிறது.

இவ்வுலகில் “மாறாதது” என்று எதுவுமில்லை “மாற்றம்” என்ற ஒரு சொல் மட்டும் மாறாதது. ஜோதிடமும் இதற்கு விதிவிலக்கில்லை, மாறிவரும் காலதேச வர்த்த மானத்திற்குத்தக்கபடி நம் முன்னோர்கள், ஞானிகள், ரிஷிகள், யோகிகள் சொல்லிவிட்டுச் சென்றுள்ள ஜோதிடத்தை நாமும் மாற்றிப் பயன்படுத்த வேண்டியுள்ளது.

மாறிவரும் விஞ்ஞானத் தொழில்நுட்பம் தனிமனது வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தவல்லக் காரணியாகிறது. அதற்கேற்ப ஜோதிடமும் விஞ்ஞானத்தின் துணை கொண்டு தனனை மாற்றி கால ஓட்டத்தில் மாறி வருகிறது. ஆகாயத்தில் உலவும் கிரகங்களின் நிலையறிந்து தனிமனிதனது வாழ்வில் ஏற்படும் மாற்றங்களை விஞ்ஞானப்பூர்வமாக அறிந்து கொள்வதே ஜோதிடம் ஆகும். பூமியில் ஏற்படும் கிரகங்களின் தாக்கத்தை வைத்து ஒவ்வொரு மனிதனது வாழ்க்கையிலும் ஏற்படும் விஷயங்களை விளக்கிக் குறிப்பிடுகிறது.

ஆயகலைகள் 64ல் ஜோதிடமும் ஒரு கலையாகும் எல்லாக்கலைகளும் ஏதாவது ஒரு காலத்தில் வளர்ந்து கொண்டு இருப்பதுபோல் ஜோதிடமும் தற்காலத்தில் காலதேச வர்த்தமானத்திற்கேற்ப வளர்ச்சி அடைந்து வருகிறது.

ஒரு மனிதன் பிறக்கும் பொழுது இப்பூமியில் அவனுக்கென்று ஜாதகக் கட்டம் செயல்படுகிறது. அப்பொழுது வானில் உள்ள கிரக நிலைகள் அக்கட்டத்தில் குறிக்கப்படுகின்றன. அதன்மேல் மற்ற கிரகங்கள் தற்காலத்தில் சுற்றிவரும் காலமே கோச்சாரம் ஆகும். இதனடிப்படையில் ஒருவருக்கு எப்பொழுது என்ன நிகழ்வுகள் நடக்கும் என்று கணிக்கப்படுகிறது அல்லது அனுமானிக்கப்படுகிறது. இதில் விஞ்ஞானத்தின் துணை கொண்டு கிரகங்களின் நிலையறிந்து துல்லியமாக பலன் உரைப்பதே ஜோதிடமாகும்.
இப்படிப்பட்ட ஒரு பல கலையான ஜோதிடத்தை ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய எதிர்காலத்தை அறிந்து கொள்வதில் ஆர்வமும் முயற்சியும் மேற்கொண்டு அதனடிப்படையில் அமைத்து வெற்றி பெறுவதே விவேகமாகும்.

ஜோதிடப் பலன் அறிய பல முறைகள் உள்ளன, இருப்பினும் நம் நவீன விஞ்ஞான காலத்திற்கேற்ப நம் வாழ்வில் நமக்கு ஏற்படும் பிரச்சனைகளை கிரகங்களின் நட்சத்திர சார ஜோதிட அடிப்படையில் பலன்கள் அளிக்கப்படுகிறது.

இந்த இணையதளத்தின் வாயிலாக உங்கள் ஜாதகப்படி உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும் மேலும் இந்திய ஜோதிட முறையிலும் மேற்கித்திய ஜோதிட முறையிலும் பலன்கள் உரைக்கப்படும். மேலும் திருமணப்பொருத்தம், எண்கணிதம், கைரேகை, வாஸ்து சாஸ்த்திரம் பார்க்கப்படும். மேலும் பிரஸ்ஸனம் மற்றும் டாரட் கார்டைப் பயன்படுத்தி பலன் உரைக்கப்படும். இத்துடன் அதிர்ஷ்டக் கற்கள் தேர்வு செய்து பரிந்துரைக்கப்படும். மேலும் ஜோதிடம் பயின்று ஜோதிடம் பார்க்கும் ஜோதிடர்களுக்கு உயர் கணிதமாக சார ஜோதிட அடிப்படையில் எளிய முறையில் எப்படி பலன் உரைப்பது என்பது பற்றி கற்றுத்தரப்படும். 

link :: MY WEBSITE LINK